bird flu

சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தநிலையில் உலகில் முதல்முறையாக சீனாவில் ஒருவருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஜியாங்சு நகரைச் சேர்ந்த 41 வயதான ஒருவர், காய்ச்சல் மற்றும் பிற உடல் உபாதைகளோடு கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே 28 ஆம் தேதி, எச் 10 என் 3 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இருப்பினும் அவருக்கு இந்த வகை பறவை காய்ச்சல் நோய்த் தொற்று எவ்வாறு ஏற்பட்டது எனச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு இந்த பறவை காய்ச்சல் தொற்று ஏற்படவில்லை எனவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீடு திரும்பத் தயாராக இருப்பதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

Advertisment

மேலும், இந்த எச் 10 என் 3 வைரஸ் தொற்று, குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நோய்க்கிருமி எனவும், இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு எனவும் அது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அந்தநாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்முறையாக சீனாவில் பரவத்தொடங்கிய H7N9 என்ற பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்றின் திரிபு, சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 2016 -17 ஆண்டுகளில் H7N9 பறவைக்காய்ச்சல் வைரஸ் திரிபுக்கு 281 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.