
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து எடுத்து வருகிறார். கடந்தஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றவுடன், சட்டவிரோத குடியேற்றச் சட்டத் திருத்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். அதன்படி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சட்ட விரோதமாக குடியேறிவர்களை அடையாளம் கண்டு நாள் ஒன்றுக்கு 3,000 பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 44 ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 44 பேருக்கு ஆதரவாகவும், டிரம்ப் குடியேற்றச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் 7ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தியதால் போர்களமாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு ஆதரவாகவும், டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்களும் வெகுவாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தும், பொது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக தொடர்ந்து 4வது நாட்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் என்.ஜி எனப்படும் தேசிய காவல் படை போலீசார் அனுப்பி வைத்து அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை தேசிய காவல் படை போலீசார் ரப்பர் தோட்டாக்களை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டிரம்ப் அரசின் செயல்பாடுகளை எதிர்த்து அவர் மீது கலிபோர்னியா கவர்னர் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இல்லாமல் போராட்டக்காரர்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் தேசிய காவல் படை போலீசாரை நிறுத்தியதை அடுத்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து கலிபோர்னியா கவர்னர் கவின் நியூஸ்கம் தெரிவித்துள்ளதாவது, ‘ போராட்டக்கார்களுக்கு எதிராக 2000 தேசிய காவல் படை போலீசாரை குவித்தது சட்ட விரோதம். இது ஒழுங்கை மீட்டெடுப்பதற்குப் பதிலாக வன்முறையை அதிகரிக்கக்கூடும். இது மாநில இறையாண்மையை மீறுவதாகும்’ எனத் தெரிவித்து தனது கண்டனத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவேற்றினார். இது வைரலாகி வருகிறது.