Skip to main content

கரோனாவைக் கட்டுப்படுத்தும் பாம்பு விஷம் -  பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

corona medicine

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கரோனா சிகிச்சைக்குத் தனியாக மருந்து இதுவரைக் கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கானச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளே கரோனாவிற்குச் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

இந்தநிலையில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் பாம்பு விஷம் கரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். ஜரரகுசு பிட்விபர் என்ற பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கரோனா பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட்விபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கரோனா வைரஸில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால் ஜரரகுசு பிட்விபர் பாம்புகளை பிடிக்கவோ வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்துள்ளார்.

 

பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு கரோனாவைக் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, கரோனாவிற்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.