மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானின் பெஷாவரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கான மசூதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வழக்கம்போல வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் காவலர்களை மீறி மசூதிக்குள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்டதகராறில் அந்த இரண்டு பெரும் காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
அதன்பின்பு, அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் தொழுகைக்காக வந்திருந்த 30 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 50 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது அங்கு சுமார் 150 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காதநிலையில், பெஷாவர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.