Skip to main content

நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை; பெண் எம்.பி. கண்ணீர்!

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

australian parliament member lidia thorpe speech

 

பெண் எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்துப் பேசியது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. லிடியா தோர்ப் என்பவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஆஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டடம் பெண்களுக்கு பாதுகாப்பான கட்டடம் அல்ல. இங்கு பெண்கள் பணி செய்வதற்கு உகந்த இடம் இல்லை. கட்டடத்தின் மாடிப் படிகளில் நடந்து வர முடியவில்லை. இவ்வாறு நடந்து வரும்போது தகாத இடத்தில் என்னை தொட்டார்கள். இந்த செயலை நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த மனிதர்கள் செய்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வான் என்னிடம் மிகவும் தவறாக நடந்து கொண்டார்.

 

நாடாளுமன்றத்தின் அலுவலக வாயிலுக்கு வெளியே நடந்து செல்ல பயந்தேன். நான் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் முன் அலுவலகக் கதவைத் திறந்து நான் செல்லக்கூடிய வழியில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பிறகு தான் செல்வேன். ஏனெனில் நான் நடந்து செல்லும் போதெல்லாம் யாராவது ஒருவர் எனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தபடி இருந்தனர். மேலும் அத்துமீறி என்னை விடாமல் பின் தொடர்ந்து வந்து உடலைத்  தொடுவது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானேன். இது மட்டுமின்றி வாய் மொழியாகப் பாலியல் ரீதியான கிண்டலுக்கும் உள்ளானேன். இதேபோன்று இங்கு பல பெண்களுக்கும் நடந்துள்ளது. அவர்கள் தங்கள் பதவிக்காக இதைப் பற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

 

பெண் எம்.பி. லிடியா தோர்ப்பின் இந்த பேச்சு, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து லிபரல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் வான் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளால் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரத்தில் லிபரல் கட்சி, டேவிட் வான்-ஐ சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.