'Attack on my friend'-PM Modi condemns

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அங்கு தேர்தல் பரப்புரை அமெரிக்காவில் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் முன்னாள் அதிபர் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமா 'நமது ஜனநாயகத்தில் அரசியல் சார்ந்த வன்முறைகளுக்கு இடம் இல்லை. ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' என தெரிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் 'டிரம்பிற்கு தனது முழு ஆதரவை அளிப்பதாகவும் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறை தலைமை அதிகாரி பதவி விலக வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஒ சுந்தர் பிச்சை, அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டின் போது அவருடைய ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

 'Attack on my friend'-PM Modi condemns

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என்னுடைய நண்பர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசியலிலும்,ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment