Skip to main content

பணத்தை கொண்டு செல்லவில்லை; நாடு திரும்ப பேச்சுவார்த்தை - ஆப்கான் அதிபர்!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

ashraf gahani

 

ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அண்மையில் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்தனர். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ஃரப் கனி, தனது குடும்பத்தினருடன் நாட்டைவிட்டு தப்பி ஓடியதாகவும், தப்பி ஓடும்போது மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியானது.

 

இருப்பினும் தப்பிச் சென்ற அஷ்ஃரப் கனி எங்கே இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் நேற்று (18.08.2021), அஷ்ஃரப் கனி தங்கள் நாட்டில்தான் இருக்கிறார் என ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்பிறகு அஷ்ஃரப் கனி, ஆப்கான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோ செய்தியில் அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்க விரும்பவில்லையென்றும், ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறியுள்ளார். "தற்போது இரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்காகவும், குழப்பத்தைத் தடுப்பதற்காகவும் அமீரகத்தில் இருக்கிறேன்" என தெரிவித்துள்ள அஷ்ஃரப் கனி, "உங்கள் அதிபர் உங்களை விற்றுவிட்டு தனது சொந்த நலனுக்காகவும், தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் தப்பிச் சென்றுவிட்டார் என யார் கூறினாலும் நம்பாதீர்கள். இந்தக் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. நான் அவற்றைக் கடுமையாக மறுக்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

 

"நான் அங்கிருந்திருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கன் அதிபர் ஒருவர், ஆப்கானின் கண்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்" என கூறியுள்ள அஷ்ஃரப் கனி, ஆப்கானைவிட்டு வெளியேறியபோது காரிலும் ஹெலிகாப்டரிலும் பணத்தை எடுத்துச் சென்றதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காலணியைக் கழட்டிவிட்டு பூட்ஸை அணியக் கூட வாய்ப்பில்லாத நிலையில்தான் ஆப்கானைவிட்டு வெளியேறியதாக அஷ்ஃரப் கனி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
A succession of earthquakes within half an hour in afghanistan

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் நேற்று முன் தினம் (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  

3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதில் 62 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டன. மேலும் மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கதை தொடர்ந்து ரஷ்யாவிலும், வடகொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று (03-01-24) நள்ளிரவு இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ரிக்ட அளவில் 4.4 புள்ளிகளாகப் பதிவான முதல் நிலநடுக்கம் நள்ளிரவு 12:28 மணியளவில் பைசபாத்தில் இருந்து 126 கி.மீ கிழக்கு தொலைவில் 80 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து, நள்ளிரவு 12:55 மணியளவில் பைசபாத்தில் இருந்து 100 கி.மீ தென் கிழக்கு தொலைவில் 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அளவில் பதிவானது. அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகமல் இருக்கின்றது.