வீணான ரஷ்யாவின் முயற்சி... நாகோர்னோ காராபாக் பகுதிக்காக மீண்டும் போர்...

armenia azerbaijan exceed ceasefire

ரஷ்யாவின் முயற்சியால் அர்மீனியா, அஜர்பைஜான் இடையே கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நேற்று மீறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1994 பிரிவினை போருக்குப் பின்னர் அர்மீனியா-அஜர்பைஜான் எல்லைப்பகுதியில் உள்ள நாகோர்னோ-காராபாக் எனும் மலைப்பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக இந்த இருநாடுகளும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. சுமார் 30 ஆண்டுகாலமாக நீடித்துவந்த இந்தப் பிரச்சனை, கடந்த செப்டம்பர் மாதம் இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையேயான மோதலாக வெடித்தது. சர்ச்சைக்குள்ளான பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானது என்றாலும், அர்மீனிய இனத்தவர்களே அதனைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் முதல் நடைபெற்ற மோதலில், ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

இதனையடுத்து நாளுக்குநாள் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் அதிகரித்துவந்த சூழலில், உலக நாடுகள் பலவும் இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுத்தன. இதில் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தற்போது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சூழலில், நேற்று மீண்டும் இருநாட்டு ராணுவத்தினரின் மோதலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் மீது தீவிரமான குண்டு வீச்சுத் தாக்குதல்களை முன்னெடுத்ததாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் அஜர்பைஜான் நாட்டில் மொத்தத்தில் ஒன்பது அடுக்குமாடிக் குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் அஜர்பைஜானின் வெளி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

armenia Russia
இதையும் படியுங்கள்
Subscribe