Skip to main content

அமெரிக்காவின் பொருளாதார போர்... சீனாவுக்கு இவ்வளவு வரியா???

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
trump


சமீப காலமாக இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் இறங்கியுள்ளனர். இதனால் உலகளவில் பல நாடுகளும் பாதிப்படைகின்றன. கடந்த மாதம் கூட அமெரிக்கா சீனாவின் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகின.
 

அந்த கூடுதல் வரிப் பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், சீன கடல் உணவுகள், கார்பெண்டரி பொருட்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என்று சொல்லப்படுகிறது.
 

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ், “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெளிவு படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.மேலும் அதில்,அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
 

இந்நிலையில், சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்துள்ளது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கான இந்த வரி விதிப்பு செப்டம்பர் 24ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரியில் இருந்து இந்த வரிவிதிப்பானது 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜி 20 உச்சி மாநாடு; சீன அதிபர் புறக்கணிப்பு?

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

G20 Summit Chinese president boycott

 

ஜி 20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின், நாடு திரும்ப உள்ளார்.

 

இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இவருக்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக உக்ரைனில் மனித உரிமை மீறல் தொடர்பாக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதன் காரணமாக ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மூன்றாவது முறையாக சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Xi Jinping has been elected as President of China for the third term

 

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

சீன நாட்டின் அதிபராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த விதியை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார். அதன் மூலம் ஒருவர் அவர் ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை அதிபராக இருக்கலாம் என்ற புதிய விதி உருவாக்கப்பட்டது.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஸீ ஸாங்க் ஷ்வான் என்பவரின் மகனான ஜி ஜின்பிங் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். அதன் பிறகு கட்சியில் இணைந்து பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்து வந்த ஜி.ஜின்பிங் 2013 ஆம் ஆண்டு சீனாவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சீனாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அத்தோடு சீனாவின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.  ஆனால் இது ஒரு புறம் இருக்க ஜி ஜின்பிங் ஆட்சியில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியே பேசுபவர்கள், அவருக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் செய்திகள் வெளி வந்தன. குறிப்பாக ஜி ஜின்பிங் குறித்து எந்த விதமான விமர்சனங்களும் வெளியே வராமல் பார்த்துக்கொள்வதாகவும்  ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கிட்டதட்ட 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்ததாகவும், அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.