
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன்படி, அமெரிக்காவில் இரு பாலினம், சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து போன்ற அறிவிப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போயின. இந்த சூழ்நிலையில், சீனா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அதில் அறிவிப்பில், இந்தியப் பொருட்களுக்கு 27% இறக்குமதி பரஸ்பர வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 34% பரஸ்பர வரியையும் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரியும், ஜப்பான் பொருட்களுக்கு 22% இறக்குமதி வரியும் விதிக்கப்படுவதாகத் பாகிஸ்தான் 29%, வியட்நாம் 46%, வங்கதேசம் 37% என இப்படியாக ஒவ்வொரு நாட்டில் இருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையால், பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 84% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா அறிவித்தது. உடனடியாக சீனாவுக்கு பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு 125% வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. உத்தரவிட்டார். வரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இதன் மூலம், உலகில் இருக்கும் தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதனால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனிடையே, டிரம்ப் விதித்த வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்காவில் பல மாகாணங்களில் பல வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, அமெரிக்க வணிக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதிட்டதாவது, ‘உலகளாவிய மோதல்களைத் தீர்க்க அதிபர் டிரம்ப் வரி அச்சுறுத்தலைப் பயன்படுத்தினார். டிரம்ப் விதித்த வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஊக்குவித்தது. இந்த வழக்கில் அதிபர் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு பாதகமான தீர்ப்பு வந்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் மோதல் உருவாகக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘ஒரு அசாதாரண அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அவசரகாலத்தின் போது, தேவையான பொருளாதாரத் தடைகளை விதிக்க மட்டுமே அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதிகாரதின் மூலம் அவசரகாலச் சட்டங்களை அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். கூட்டாட்சி சட்டம் இதை அனுமதிக்காததால் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி வரிகளை அதிபர் விதிக்க முடியாது. அதனால், டிரம்ப்பின் இந்த செயல் சட்டவிரோதமானது’ என்று டிரம்ப்பின் வரிவிதிப்பு உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.