தென்கிழக்கு ஐரோப்பியாவில் பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள அல்பேனியாவில் கடந்த 30 ஆண்டுகளில் காணாத அளவுக்கு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பேரழிவை உண்டாக்கியுள்ள இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்திருக்கிறது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

650 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இவர்களில் 10 பேருக்கு பலத்த காயம் பட்டிருக்கிறது. இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பார்கள் என்று தெரியாத நிலையில், இன்னும் உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் அங்குள்ள தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அஞ்சி, வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.