Skip to main content

"எங்கள் ஆட்சி எப்படி இருக்கும்?" - தலிபான் விளக்கம்! 

Published on 18/08/2021 | Edited on 18/08/2021

 

 

Afghanistan administeration pressmeet at kabul


தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகளைத் தொடர்ந்து, வாட்ஸ் ஆப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அவர்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், ஆதரவான பதிவுகளை நீக்கியுள்ளதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தலிபான்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளும் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

அமெரிக்க சட்டப்படி தலிபான் ஒரு பயங்கரவாதம் இயக்கம் என்பதால், அவர்களது தகவல் தொடர்பைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மற்றொரு சமூக வலைத்தளமான ட்விட்டர், தலிபான்கள் விவகாரத்தில் தங்களது கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் ட்விட்டர் வாயிலாக உதவிகளைக் கேட்டு வருவதாகக் கூறியுள்ள அந்நிறுவனம், மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்முறையைக் கொண்டாடும் ட்விட்டர் பதிவுகள் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு முதல் முறையாக தலைநகர் காபூலில் செய்தியாளர்களுக்கு தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் பேட்டியளித்தார். அதில், "அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர உதவிய ஆப்கானிஸ்தான் மக்களுக்குப் பாராட்டுகள் என்று பேச்சைத் தொடங்கினார் அவர். ஆப்கானிஸ்தான் மண்ணை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தங்கள் ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

 

தொடர்ந்து பேசிய அவர்,  "காபூலில் உள்ள பன்னாட்டுத் தூதரகங்களைப் பாதுகாக்க உறுதி அளிக்கிறோம். யாரையும் பழிவாங்கும் எண்ணம் தலிபானுக்கு இல்லை. ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய பிறகு தலைநகர் காபூலின் நுழைவு வாயிலில் போராட்டத்தை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டோம். ஆனால், எதிர்பாராத விதமாக அரசு தோல்வி அடைந்து வெளியேறிவிட்டது. அவர்களால் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. வெளிநாட்டு அமைப்புகள், தூதரகங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படும். அவர்கள் பணியில் இருந்தாலும், எந்தச் செயலில் இருந்தாலும் அனுமதிக்கப்படுவர். சமுதாயத்தில் முக்கியமானவர்களாக பெண்கள் உள்ளனர். ஷரியத் சட்டப்படி பெண்களுக்கு உரிமை வழங்கப்படும்" என்று கூறினார். 

 

இச்சூழலில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பு குறித்த மாறுபாட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பள்ளிகளுக்குச் சென்று வந்த சிறுமிகளுக்கு தலிபான்கள் முழு உடலையும் மறைக்கும் பர்தாவை வழங்கினர். அதேபோல், டோலோ செய்தி தொலைக்காட்சியில் பெண் நெறியாளர் ஒருவர், தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நேர்காணல் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தலிபான்கள் கூறினாலும், பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். சில இடங்களில் பத்திரிகையாளர்களைத் தேடி தலிபான்கள் வீடு வீடாகச் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும், முந்தைய அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பலரை தலிபான்கள் விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

IND vs AFG : தொடரை வென்ற இந்திய அணி

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Indian team won the series

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 வது டி20 போட்டி இன்று (14.01.2024) இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே ‘டக்’ அவுட் ஆகி இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா  ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் இந்திய அணி 15.4 ஓவர்களில்  4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம்  6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

டெல்லியில் லேசான நில அதிர்வு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
 Mild earthquake in Delhi

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் இன்று மதியம் 02.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.