Skip to main content

286 முறை கிரெடிட் ஆன சம்பளம்... தலைமறைவான ஊழியர் !

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

286 times credited salary ... employee disappearance!

 

ஊழியர் ஒருவருக்கு ஒருமுறைக்குப் பதிலாக 286 முறை சம்பளம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆன நிலையில்  'போதுமடா சாமி' என மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஊழியர் தலைமறைவான சம்பவம் சிலி நாட்டில் நிகழ்ந்துள்ளது.

 

சிலி நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு அவர் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து வழக்கம்போல் மாத சம்பளம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகியுள்ளது. ஆனால் சம்பளம் வருவதற்கான மெஸேஜை பார்த்த அந்த ஊழியர் சற்று தலைசுத்திதான் போயிருப்பார். காரணம் கிரெடிட் ஆனது ஒரு மாத சம்பளம் அல்ல 286 மாதங்களுக்கான சம்பளம். ஆம் 286 முறை சம்பளம் கிரெடிட் ஆகியிருப்பது அந்த ஊழியருக்கு வியப்பைக் கொடுத்தது. ஒரு மாத சம்பளம் 500,000 சிலியன் பெஸோஸ் ( இந்திய மதிப்பில் ரூ.43,000 ). அவர் பணிபுரியும் நிறுவனம் இவருக்கு வழங்கிய சம்பளம் 165,398,851 சிலியன் பெஸோஸ். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.42 கோடி ஆகும். இந்த தவறை உணர்ந்த நிறுவனம் பணத்தைத் திரும்பக் கொடுக்கச் சொல்லி அவரை தொடர்பு கொண்ட பொழுது வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்து வருவதாக அந்த ஊழியரும் சொல்லிச் சென்றுள்ளார்.

 

நிறுவனமும் பணம் வந்துவிடும் என்று காத்திருந்தது. போனவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, வங்கியிலிருந்து பணம் வந்ததற்கான குறுஞ்செய்திகளும் வரவில்லை. அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முயன்ற போது அந்த நபரும் பதிலளிக்கவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த நபரே நிறுவனத்திற்குத் தொடர்புகொண்டு உறங்கிவிட்டதாகச் சொல்லி, இனிமேல் தான் வங்கிக்குச் செல்லவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

 

ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி அலுவலகத்திற்குச் சென்று தான் வேலையை ராஜினாமா செய்வதாகச் சொல்லிவிட்டு நிறுவனம் தவறுதலாகக் கொடுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டாராம். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறதாம் அந்த நிறுவனம்.

 

 

சார்ந்த செய்திகள்