Skip to main content

"2024 தேர்தல் முடிவு மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும்" - ராகுல் காந்தி

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

2024 election result will surprise people rahul gandhi

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், பல்துறை அறிஞர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று வாசிங்டன்னில் நேஷனல் பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசுகையில், "பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தடுக்க முடியாத சக்திகள் என்று மக்கள் நம்பும் போக்கு உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. இந்த இடத்தில் எனது சிறிய கணிப்பை சொல்லுகிறேன். நாங்கள் பாஜவுடன் நேரடியாக போட்டியிடும் அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவி அதன் மூலம் அழிவை சந்திப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் பாஜகவினருக்கு கடினமானதாக இருக்கும். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றதைப் போலவே அடுத்தடுத்த மாநிலங்களிலும் வெல்வோம். அதற்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் கொண்டுள்ளோம். தயவுசெய்து ஒன்றை உணருங்கள், இந்தியாவில் 60 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை.

 

மக்கள் ஆதரவு மோடிக்கு இல்லை. பாஜகவிடம் தம்பட்டம் அடிக்கும் கருவிகள் நிறைய உள்ளன. அதனால் ஒரு விஷயத்தை மிகைப்படுத்துவதில் பாஜகவினர் வல்லவர்கள். எனவே, காங்கிரசால் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான கூட்டணி தேவை. அதற்கு தெளிவான செயல்திட்டமும் தேவை. இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசி வருகிறது. கூட்டணி விஷயத்தில் தேவைக்கேற்ப விட்டுக் கொடுத்து பெற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.  எனவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு நிச்சயம் மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமையும். தற்போது இந்தியாவில் சுதந்திரமான அமைப்புகளை கைப்பற்றுவது மற்றும் கட்டுப்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பத்திரிகைகள் உறுதியாக கைப்பற்றப்பட்டுள்ளன. மோடியை தோற்கடிக்க இயலாது என்று ஊடகங்கள் சொல்லி வருகின்றன. அதில் பல மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

 

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற விஷயங்கள் மக்களிடம் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்ய இந்தியாவில் ஏற்கனவே மிகவும் வலுவான அமைப்பு உள்ளது. ஆனால் அந்த அமைப்பு தற்போது பலவீனமடைந்து உள்ளது. எனவே அழுத்தம் தரப்படாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத தன்னாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும். அது தான் இந்தியாவில் வழக்கமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விரைவில் அவற்றை மீட்டெடுக்க முடியும். எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யும் அளவுக்கு ஜனநாயகம் தாக்கப்படும் என்று நான் நினைத்து பார்த்ததில்லை. இது ஜனநாயகத்தை தாக்கும் முறை. ஆனால் ஒரு வகையில் எனக்கு நல்லது தான். ஏனென்றால் இதன்மூலம் நான் என்ன செய்யவேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எனக்கு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள்.

 

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு நன்றி. இந்த அமெரிக்க பயணத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பதற்காக பலர் போராடத்  தயாராக இருப்பதை பார்க்க முடிகிறது" எனத் தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட்; தேர்தல் ஆணையம் அதிரடி

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Telangana DGP suspended; The Election Commission is in action

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரப்படி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 63 இடங்களையும், பிஆர்எஸ் 40 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், பிற கட்சியினர் 8 இடங்களையும் பிடித்துள்ளனர்.

 

இந்த சூழலில் தெலங்கானா மாநில போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமார், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பாகவே தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை சந்தித்தாகக் கூறி தெலங்கானா போலீஸ் டிஜிபி அஞ்சனிகுமாரை சஸ்பெண்ட் செய்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்