மிக நீண்டகாலமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்குகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த இரு நாடுகளுக்கிடையிலான அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம் ஒரு முடிவை எட்டாத நிலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவும், ஈரானுக்கு இது சம்பந்தமாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் நீட்சியாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.

Advertisment

இவ்வாறாக இந்த இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, இந்த விவகாரத்தில் அரபு நாடுகள் தலையிட்டு இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை உருவாக்கின. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், விரக்தியடைந்த அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாகத் தெரிவித்தது. இதற்காக, ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் மத்திய கிழக்கு கடற்பகுதியில் நிறுத்தி வைத்தது. இருப்பினும், ஈரான் இதற்கு வளைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. இதையடுத்து, மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. இதிலும், ஈரான் அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கவில்லை.  

Advertisment

இதனால், அமெரிக்கா ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்தது. இருப்பினும், ஈரான் இறங்கி வரவில்லை. இதைத் தொடர்ந்து அமேரிக்கா, ஈரான் மீது போர் தொடுக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, நாங்கள் போருக்குத் தயார் என ஈரான் அறிவித்திருந்தது. இதையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் குறித்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே  மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனீவாவில் இன்று (26-02-26) நடைபெற்றது. இதில், ஈரான் தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ராக்சி தலைமையிலான குழுவினரும், அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டிவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்றனர். ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர அல்புசைதி இந்த பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்தார். இருநாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தினால் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த பேச்சுவார்த்தை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment