வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் நகரின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில்  தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குண்டு வெடிப்பால் தலைநகரின் பல பகுதிகளில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. இதனால், வெனிசுலாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் வெனிசுலா நாட்டின் துணை அதிபர் டெல்சி தங்கள் நாட்டின் அதிபரைக் காணவில்லை என்று கூறியிருந்த நிலையில், அவர்களைத் தாங்கள் தான் கடத்தியுள்ளதாக அமெரிக்கா தகவல் அளித்தது. 

Advertisment

இந்த செயலுக்குத் துணை அதிபர் டெல்சி கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.  அந்த வகையில் ரஷ்யா, "இது ஒரு ஆயுதம் ஏந்திய ஆக்கிரமிப்பு, சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு அச்சுறுத்தல்" என தெரிவித்துள்ளது. அதே சமயம், “இது வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை  மீறிய செயல், இந்த செயல் கரீபிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும்" என்று ஈரான் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் "ஐ.நா. சபை மற்றும் அமெரிக்க அமைப்புகளை உனடடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், வான் வழி தாக்குதல் நடத்தியதற்கான அறிக்கையை அமெரிக்கா தாக்கல் செய்யவேண்டும்" என்று  கொலம்பியா கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. 

Advertisment

கியூபாவும் கடும் கண்டணங்களை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் அதிபரைக் கடத்தியதற்கான காரணங்களை அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதில் வெனிசுலா அதிபர் கிரிமினல் குற்றம் மற்றும் சர்வதேச அமைதியைக் குலைக்கும் விதமாகச் செயல்பட்டதாகக் காரணம் கூறியுள்ளது. இந்த நிலையில் விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் தான் வெனிசுலா அதிபர் ஏன் கடத்தப்பட்டார்? இப்போது அவர் எங்கே இருக்கிறார்? எதற்காக வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது? என்ற கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ  கடத்தப்பட்ட சம்பவத்திற்கு  உலக நாடுகள் பலவும் தொடர்ச்சியாகக் கண்டனங்களைப் பதிவு வருவது குறிப்பிடத்தக்கது.