தமிழக அரசு மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. தற்போது, இந்த மாதத்தில் 5,000 ரூபாயாக மகளிருக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த அதிரடி முடிவிற்குக் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், “வருகின்ற சட்டமன்ற தேர்தலைக் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் இந்த உரிமைத் தொகையை வழங்கவிடாமல் முடக்கி விடுவார்கள். ஒருவேளை இந்த உதவித்தொகை கிடைக்காவிட்டால், குடும்பத்தலைவிகள் கடினமான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். அவ்வாறு, அவர்கள் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாகக் கூடாது என்பதற்காக, இந்த உதவித்தொகை மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த அறிவிப்பிற்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, திமுக மகளிர் அணியினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்ட பணத்தை, கையில் காண்பித்தபடியே பெண்கள் அறிவாலயத்தில் குழுமினர். அதுபோக, திமுகவினர் இந்த அறிவிப்பைக் கொண்டாடும் விதமாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதையடுத்து, அறிவாலயத்தில் குழுமிய பெண்களுடன் முதல்வர் கலந்துரையாடினர். அதே நேரத்தில், இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இருப்பினும், வருகின்ற ஜூன் மாதத்தில் இருந்து இந்த உரிமைத் தொகையானது 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.