Woman's recovered from luxury car - another shocking incident Photograph: (sivakangai)
சிவகங்கையில் பெண் ஒருவர் சொகுசு காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டி நகரைச் சேர்ந்தவர் பாண்டிய குமார். வெளிநாட்டில் பணியாற்றி வரும் பாண்டிய குமாரின் மனைவி மகேஸ்வரி. தனியாக வசித்து வந்துள்ளார். ஆவுடைபொய்கை பகுதியில் தன்னுடைய தந்தைக்கு நிலம் வாங்குவதற்காக மகேஸ்வரி திட்டமிட்டு வந்துள்ளார்.
இதற்காக இன்று சம்பந்தப்பட்ட இடத்தை பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். நிலத்தை காண்பிப்பதாகக் கூறிய புரோக்கர் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து சம்பந்தபட்ட இடத்திற்கு முன்னதாகவே சென்ற மகேஸ்வரி புரோக்கர் மற்றும் தனது தந்தையின் வருகைக்காக தைல மரக் காட்டுப் பகுதியில் காரை நிறுத்திவிட்டு காத்திருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் கார் கதவுகளில் மகேஸ்வரியின் தலையை இடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த ஒன்பது சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் அந்த இடத்திற்கு வந்த நில புரோக்கர், மேகேஸ்வரி காரில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை டிஎஸ்பி கவுதம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி வனப்பகுதியாக இருப்பதால் கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்த சிசிடிவி காட்சிகளை திரட்ட முடியாத நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோப்ப உதவியுடன் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
அண்மையில் கோவையில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us