திருப்பூரில் உடல் கருகிய நிலையில் சடலமாக பெண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மது பாட்டிலை அடையாளமாக வைத்து கொலை செய்த மாஜி காவலரை போலீசார் இரண்டே நாளில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அடுத்துள்ளது வட்டமலை அணைப்பகுதி. ஆளரவமற்ற அந்த அணை பகுதியில் கடந்த 6 ஆம் தேதி வழக்கம்போல கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் சிலர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளக்கோவில் காவல்துறையினர். கருகி அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும் அங்கு வந்த கைரேகை நிபுணர்கள் பெண்ணின் சடலத்தை சுற்றிக் கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

Advertisment

உடற்கூராய்விற்காக உடலானது திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காத நிலையில் பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட இடத்தில் கிடந்த மது பாட்டில் ஒன்று போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக கிடைத்தது. மது பாட்டிலில் இருந்த பார்கோடை வைத்து எந்த மதுபான கடையில் அந்த மதுபாட்டில் வாங்கப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்ற போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதேநேரம் கொலை நடந்த வட்டமலை அணைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஒப்பிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நெய்காரப்பட்டியை அடுத்துள்ள கலையம்புத்தூர் பகுதியில் வசித்து வரும் சங்கர் என்பவர் அதிக சிசிடிவி காட்சிகளில் தென்பட்ட நிலையில் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், சங்கர்  27 ஆண்டுகளுக்கு முன்பு காவலராக பணியாற்றி இருந்ததும், கடந்த 1998 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும் தெரிந்தது. அதே நெய்காரப்பட்டியில் வசித்து வரும் வடிவுக்கரசி என்பவருடன் சங்கர் முறையற்ற உறவில் இருந்து தெரிந்தது.

Advertisment

அப்போது வடிவுக்கரசி தனது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என சங்கரிடம் பலமுறை கேட்டுள்ளார். வேலை வேண்டும் என்றால் செலவாகும் என தெரிவித்த சங்கர், லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கிக்கொடுக்காமல் சங்கர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் வடிவுக்கரசியை நச்சரித்து வந்துள்ளனர். இதனால் 'வேலை வாங்கி தாரா விட்டாலும் பரவாயில்லை. வாங்கிய பணத்தை கொடு' என சங்கரிடம் வடிவுக்கரசி கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி 'வெள்ளக்கோவில் பகுதிக்கு என்னுடன்  வா பணம் தருகிறேன்' எனக்கூறி சங்கர் வடிவுக்கரசியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அணை பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென சங்கர் அருகில் கிடந்த கல்லை எடுத்து வடிவுக்கரசியை கண்மூடித்தமானாக தாக்கி கொலை செய்ததோடு, வடிவுக்கரசி அணிந்திருந்த ஆறு சவரன் நகையை எடுத்துக்கொண்டு பெட்ரோலை ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.