காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடும்பத்தினரை சிக்க வைக்க காதலனோடு சேர்ந்து பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி என்ற இளம்பெண். இவரும் மனோஜ் என்ற நபரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த ஸ்வாதியின் தந்தை சோபரம் மற்றும் ஸ்வாதியின் சகோதரர்கள் ஆகியோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஸ்வாதி தனது காதலன் மனோஜை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினரின் உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து மனோஜை ஸ்வாதி ரகசியமாக சந்தித்து வந்துள்ளார்.
உணவு சாப்பிட்டவுடன் உடனடியாக தூக்கம் வருவதை உணர்ந்த ஸ்வாதியின் குடும்பத்தினர், ஸ்வாதி மீது சந்தேகப்படத் தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த ஸ்வாதி, தனது காதலன் மனோஜுடன் சேர்ந்து இன்னும் மோசமான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதாவது, தனது காதலுக்கு குடும்பத்தினர் இடையூறாக இருப்பதால் குடும்பத்தினரை பொய்யான வழக்கில் சிக்க வைக்க ஒரு கொலை சம்பவத்தை நடத்த இருவரும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் என்ற ஓவியர் ஒரு கல்லறைக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர், யோகேஷின் உடலை மீட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், முதலில் தூக்க மாத்திரைகள் கலந்த மதுவை யோகேஷை குடிக்க வைத்து, பிறகு செங்கற்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், யோகேஷின் தொலைப்பேசியை போலீசார் சோதனை செய்யத் தொடங்கினர். அதில், 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஸ்வாதியின் தந்தை மற்றும் சகோதரர்கள் தன்னை தாக்கியதாக யோகேஷ் புகார் கூறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அழைப்பில் இருந்து குரல், பாதிக்கப்பட்டவரின் குரலுடன் பொருந்ததால் போலீசார் குழம்பி போய் நின்றனர். அதனால், இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தினர்.
மின்னணு பதிவுகளை மேலும் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதாவது குடும்பத்தினரை பொய்யான வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்ப திட்டம் தீட்டிய ஸ்வாதியும் மனோஜும், சேர்ந்து குற்ற நிகழ்ச்சிகள் (Crime show), கொலை செய்துவிட்டு எப்படி தப்பிப்பது போன்ற ஆவணப்படங்களைப் பார்த்துள்ளனர். அதில் இருந்து கிடைத்த தகவலை வைத்து, ஓவியரான யோகேஷுக்கு தூக்க மாத்திரை கலந்த மதுவை கொடுத்துள்ளனர். அதனை குடித்த யோகேஷ் தூக்கத்தில் மயக்கமடைந்துள்ளார். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட இருவரும், யோகேஷை செங்கற்களால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர், 112 என்ற எண்ணை அழைத்து ஸ்வாதியின் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாக யோகேஷ் கூறுவது போல் கூறியுள்ளனர். இதனை யோகேஷின் மரண வாக்குமூலமாக போலீசார் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பி, அந்த செங்கலை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஸ்வாதி மற்றும் மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.