ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வரதாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் சத்யா குழந்தை இல்லாத காரணத்தால் வருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு அவரது கணவரும் உறவினர்களும் ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி சத்யாவும் பழனிச்சாமியும் கோமராபாளையத்தில் உள்ள தவளகிரி மலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் சத்யா மஞ்சள் கலரில் வாந்தி எடுத்தார். இதுகுறித்து அவரது தாய் கேட்டபோது, குழந்தை இல்லாத காரணத்தால் வீட்டில் வைத்திருந்த சாணி பவுடரை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டதாக தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயும் உறவினர்களும் உதவியுடன் சத்யாவை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்யா சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே சத்யா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.