Withering vegetables; Street vendors demand Photograph: (market)
சிதம்பரம் புதிய காய்கறி மார்க்கெட்டில் தெருவோர வியாபாரிகளுக்கு நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் ரூ.5 கோடி செலவில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேல வீதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்போது இங்கு மாற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கான காய்கறிகளை மார்க்கெட்டில் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நகரின் முக்கிய வீதிகள், தெருவோரமாக விவசாயிகள் மற்றும் சாலையோர சிறு வியாபாரிகள் தரையில் கடை அமைத்து, கிராமங்களில் இருந்து கொண்டுவரும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, நகராட்சி நிர்வாகம் அவர்கள் அனைவருக்கும் புதிய காய்கறி மார்க்கெட்டில் இடம் ஒதுக்கி, அங்கு தரையில் கடை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் அமரும் பகுதியில் நிழற்கான எந்த வசதியும் இல்லாமல் உள்ளது. காலை நேரத்தில் வியாபாரம் செய்து வரும் அவர்கள், வெயில் அதிகரிக்கும் நேரங்களில் குடை வைத்துக் கொண்டு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் வயதான வியாபாரிகளே உள்ளதாகவும், கடும் வெயிலால் மயக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், காய்கறி மற்றும் பழங்கள் நேரடி வெயிலில் வைக்கப்படுவதால் அவை விரைவில் கெடுகின்றன என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, ஒதுக்கப்பட்ட இடங்களில் நிழற்குடை அல்லது செட் அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us