நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சான்று வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 7ஆம் தேதி நீதிபதி ஆஷா முன்பு வந்த போது, படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆஷா, வழக்கின் தீர்ப்பை கடந்த 9ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். இதனால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி, படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு நீதிபதி ஆஷா உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் மூலம் விஜய்யின் ஜன நாயகன் படம் விரைவில் திரைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்
இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பின்பு தணிக்கை வாரியமும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று (27-01-26) வெளியாகவுள்ளது. இன்று 27ஆம் தேதி காலை 10:30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/jananaya-2026-01-27-07-44-57.jpg)