அண்மையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பயணங்கள் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு வந்த AI 315 என்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விமானம் டெல்லி விமான நிலையத்தில் வந்து தரை இறங்கி பார்க்கிங் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்திலேயே தீப்பிடித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனமும் உறுதி செய்துள்ளது. 'விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தீ விபத்து நேரிட்டுள்ளது. விமான பயணிகள், விமான சிப்பந்திகள், விமானிகள் என அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என ஏர் இந்தியா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.