Wife fights to save her husband Photograph: (forest)
ஒடிசாவில் ஒரு பெண் தனது கணவரை ஒரு கரடி கொடூரமாகத் தாக்கிய போது, ​​உயிருக்குப் பயந்து ஓடாமல், கரடியுடன் சண்டை போட்டு கணவனை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியாவின் அருகே உள்ள மிலு என்ற கிராமத்தில் நேற்று (17/2/2026) இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மால்டே சோரன் என்பவர் அவரது மனைவி லில்லி சோரனும் இலைகளை சேகரிக்க காட்டுக்குள் சென்றபோது திடீரென ஆறு காட்டு கரடிகள் அவர்களை சூழ்ந்துகொண்டது.
கரடிகளில் ஒன்று திடீரென மால்டே சோரன் மீது தாக்குதல் நடத்தியது. கரடி அவரை கடித்து பலத்த காயம் ஏற்படுத்தியது. அருகில் நின்றுகொண்டிருந்த லில்லி சோரன் கரடியை எதிர்கொண்டார். லில்லி ஒரு டாங்கியா (பாரம்பரிய கோடரி போன்ற கருவி) பயன்படுத்தி கரடி மீது தாக்குதல் நடத்தினார். லில்லியையும் கரடி தாக்கி காயப்படுத்தியது. இருப்பினும் விடாமல் லில்லி தாக்குதல் நடத்தியதால் கரடி கூட்டம் பின்வாங்கி ஓட்டம் எடுத்தது.
மால்டே ஏற்கனவே கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருந்தார். குறிப்பாக உச்சந்தலையில் அதீத ரத்த காயங்கள் ஏற்பட்டது. அவசர சேவைகள் மூலம்மீட்கப்பட்ட மால்டே உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயங்களின் தீவிரம் காரணமாக, பின்னர் மாவட்ட மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.
அண்மையில் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் காட்டு யானைகள் கூட்டத்தால் மிதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது என கரஞ்சியா வனத்துறை ரேஞ்சர் பிரசாந்த் குமார் ஸ்வைன் தெரிவித்துள்ளார்.
Follow Us