2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமான சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'இல்லம் நாடி; உள்ளம் தேடி' என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் திறந்தவெளி வேனில் பேசிய பொழுது, ''விஜயகாந்த் இருக்கும் வரைக்கும் அவருடைய அருமை தெரியவில்லை. எல்லோரும் ஏளனமாக பேசினார்கள். யூடியூபில் எதை எதையோ பேசினார்கள். இன்று மறைந்த பிறகு விஜயகாந்த் போல ஒருத்தர்? வருவாரா விஜயகாந்தை போன்ற ஒரு நல்லவர் இருக்காரா? விஜயகாந்த் போல மக்களுக்கு நல்லது செய்தவர்கள் இருக்கிறார்களா? என்று யூட்யூபில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருந்த பொழுது ஏன் அவருடைய அருமை யாருக்கும் தெரியவில்லையா? ஏன் தெரியவில்லை என்று மக்களைக் கேட்கிறேன். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி யாருக்காக விஜயகாந்த் பேசினார் மக்களுக்காக தான். விஜயகாந்த் ஒருமுறை முதலமைச்சராக ஆகி இருந்தால் 50 கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் விஜயகாந்தை ஒன்றும் செய்திருக்க முடியாது. ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று எவ்வளவோ சொன்னார்'' என்றார்.