'தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது அதிமுக. கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் கூட்டணி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், 'அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்' என தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணி அமையுமா? தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற கேள்விக்கு 'சில காலம் காத்திருங்கள் அனைத்தும் தெளிவாகும்' என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/06/27/a4226-2025-06-27-12-28-41.jpg)
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் அமித்ஷாவின் பேட்டி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''தமிழகத்திற்கு வந்த அமித்ஷா என்றைக்கு பாஜக-அதிமுக கூட்டணி குறித்து சொன்னாரோ அன்றிலிருந்து திமுகவுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. திமுகவிற்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள் 'கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா சொல்லியுள்ள நிலையில் தமிழகத்தில் தனித்த அதிமுக ஆட்சி அமையும் என வைகைச் செல்வன் சொல்லியுள்ளாரே' என கேள்வி எழுப்பினர். அதற்கு, ''இதுகுறித்து அமித்ஷாவுடன் அதிமுகவின் பொதுச்செயலாளர் பேசிக்கொள்வார்'' என்றார்.
'தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை அமித்ஷா ஏன் குறிப்பிடவில்லை?' என தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ''நீங்கள் இன்னைக்கு உள்ளதை பேசக்கூடாது. தமிழக்த்திற்கு வந்து பாஜக-அதிமுக கூட்டணியை அறிவித்த அன்றே அமித்ஷா என்ன சொன்னார். அவருடைய (எடப்பாடி பழனிசாமி) தலைமையில் ஆட்சி அமையும் என்று சொல்லியுள்ளார்' என்றார்.
'விஜய் கூட்டணிக்கு வந்து விடுவாரா?' என்ற கேள்விக்கு ''நல்லது நடக்கும்'' என பதிலளித்தார்.