தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக தரப்பில் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று விஜய் தரப்பில் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதேபோல் அரசு தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா, சில நிமிடங்களிலேயே அந்த பதிவை நீக்கினார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இலங்கை, நேபாளம் போல அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்று இளைஞர்களை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கினார். கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாகக் கூறி ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு கரூர் காவல்துறையினர் வந்தனர். 41 பேர் உயிரிழப்பு குறித்து விசாரிக்கவும், கரூர் கூட்ட நெரிசல் சமயத்தில் தவெக ஐடி விங் எடுத்துள்ள வீடியோ, விஜய்யின் தனிநபர் கேமராமேன் எடுத்த வீடியோக்கள், பிரச்சார வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கோரியும் ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள சி.டி.நிர்மல்குமார் இல்லத்தில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களை கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த நிர்மல் குமாரின் உதவியாளர்களிடம் சி.டிநிர்மல் குமார் எங்கே? என அவர்களின் செல்போனை ஆய்வு செய்து கரூர் போலீசார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.