மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எந்த ஒரு பணிகளும் நடைபெறாத நிலையில், பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்குச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதில் 221 ஏக்கரில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, செவிலியர்கள் கல்லூரி, பணியாளர்கள் குடியிருப்பு, மாணவ மாணவியருக்கான விடுதிகள் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அனுமதியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர், ரூ. 2021 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்டத்தைப் பிரதமர் மோடி பிப்ரவரி 28ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மருத்துவக் கல்லூரி, வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் பிரிவு, மருத்துவ மாணவ மாணவர்கள் தங்கும் விடுதி என 3 கட்டடங்கள் முதற் கட்டத்தில் திறந்து வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகப் பயின்று வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மார்ச் மாதம் முதல் இங்குப் பயில உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் எயிம்ஸ் முழு கட்டுமானம் முடிவடைந்து அடுத்த ஆண்டு (2027ஆம் ஆண்டு) பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/madurai-aiims-2026-02-05-11-27-04.jpg)