'தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்' என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது அதிமுக. கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை சேர்க்கும் முயற்சிகளில் அதிமுக இறங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடுத்த பேட்டியில் கூட்டணி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில், 'அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்' என தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணி அமையுமா? தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற கேள்விக்கு 'சில காலம் காத்திருங்கள் அனைத்தும் தெளிவாகும்' என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அதிமுகவும் பாஜகவும் இணைந்து கூட்டணி அமைத்ததாக அமித்ஷா மட்டுமே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி என அமித்ஷா சொல்லிக் கொண்டிருக்கிறார். கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் சொல்கிறார். இதற்கெல்லாம் அதிமுக தலைவர்கள், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தான் இது குறித்த விளக்கத்தை அல்லது தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
பாஜக தலைமையில் கூட்டணியா அதிமுக தலைமையில் கூட்டணியா என்ற கேள்வியும் எழுகிறது. அறிவிக்க வேண்டியவர் யார்? அவர் உள்துறை அமைச்சராக இருக்கலாம், பாஜகவின் மூத்த தலைவரில் ஒருவராக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு உருவாகி இருக்கின்ற இந்த கூட்டணியை தலைமை வகித்து வழிநடத்துவது எடப்பாடி பழனிசாமி அவர்களா? அல்லது அமித்ஷா அவர்களா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி தான் பதில் சொல்ல வேண்டும். விளக்கம் அளிக்க வேண்டும்.
தனியாக கூட்டணி அமைப்பது என்றால் அதிமுக இவ்வளவு அவசரமாக கூட்டணி ஏற்படுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுத்து இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதத்திற்கு மேல் உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது என சொல்லிவிட்டார்கள். என்ன அழுத்தமோ என்ன காரணமோ. மிகவும் முன்கூட்டியே கூட்டணியை அறிவிக்கும் நிலை அதிமுகவிற்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே பின்னணியை விளக்க வேண்டிய பொறுப்பு அதிமுக தலைமைக்கு இருக்கிறது'' என்றார்.