திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர் வெல்டிங் தொழில் செய்து வரும் நிலையில், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், சுரேஷ் நேற்று மாலை துரிஞ்சிகுப்பம் சுடுகாடு அருகில் சென்றுள்ளார். அப்போது அங்கே மது போதையில் இருந்த சில இளைஞர்கள், சுரேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வாக்குவாதம் முற்றியதில் இளைஞர்கள், சுரேஷை தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய சுரேஷை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள், அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், ரத்த வெள்ளத்தில் கிடந்த சுரேஷை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக ஆலங்காயம் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சடலமாக கிடந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியமளா தேவி, சம்பவம் இடத்தில் மோப்பநாய் உதவியுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே இந்த சம்பவம்  குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெல்டிங் கடை தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். வாணியம்பாடி அருகே மதுபோதையில், வெல்டிங்கடையில் பணியாற்றும் தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment