'முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது' என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒருவரை குறி வைத்து இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்படுவது சாதாரண நிகழ்வாக அல்ல; திட்டமிட்ட அழுத்த முயற்சியாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தின் சார்பில், அனைத்து ஜனநாயக உணர்வு கொண்ட மக்களும் இணைந்து இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

Advertisment

சமூகப் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கும், நீதிபதிகள், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய பொது நபர்கள் மீது தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடுக்கப்படும் நடைமுறை கவலைக்குரியது. கருத்து வேறுபாடுகளை சட்ட அழுத்தமாக மாற்றும் இத்தகைய செயல்பாடுகள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு பாதகமானவை.

முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் அவர்கள் பல முக்கிய பொதுநல மற்றும் சமூகநீதி சார்ந்த பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாட்டுடன் கருத்து தெரிவித்து வந்துள்ளார்: எந்த அரசியல் கட்சியாயினும் தவறு செய்தால் அதைத் திறந்த மனதுடன் விமர்சிக்கும் சமரசமற்ற, நேர்மையான குரலாக அவர் திகழ்கிறார்.

Advertisment

சமூகநீதிக்காக குரல் கொடுக்கும் நபர்களை வழக்குகள் மூலம் மௌனப்படுத்த முயல்வது ஜனநாயக மனப்பான்மைக்கு எதிரானது. சமூக செயற்பாட்டாளர்கள் மீது ஏற்படுத்தப்படும் மிரட்டல்கள் அவர்களின் பயணத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது. இன்று அவர்களுக்கு நடைபெறும் அநீதி, நாளை நமக்கே நேரலாம்; மறுநாள் முழு சமூகத்தையும் பாதிக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும்.

சமூக நலனுக்காக போராடுபவர்களின் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்போம். அவர்களுக்கு ஆதரவளிப்பது ஒருவரின் செயல் அல்ல சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு. நீதிக்கும் சமத்துவத்திற்கும் மனித நேயத்திற்கும் நாம் குரல் கொடுப்போம். என தெரிவித்துள்ளார்.