2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து சென்னை நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

Advertisment

அப்போது பேசிய பியூஸ்கோயல், ‘’இன்றைய சந்திப்பு நன்றாக அமைந்தது. தமிழகத்தில் சில மாதங்களாக நடைபெற்ற மக்கள் பிரச்சனைகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல் குறித்தும் பேசினோம். 2026 தேர்தல் யுத்தத்தை எதிர்கொள்வது குறித்து விவாதித்தோம். வரும் சட்டமன்றத் தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் சந்திப்போம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்பது தான் மோடி அரசின் உயரிய இலக்கு. அதை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை பெறுவது எப்படி என்பது குறித்து விவாதித்தோம். மோடியில் தலைமையில் ஒரே குடும்பமாக, அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்’’ என்றார். 

Advertisment

இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி , ‘’2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது குறித்து   மத்திய அமைச்சருடன் தமிழக நிலவரம் குறித்து விவாதித்தோம். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். திமுக ஆட்சியை அகற்ற கூட்டணிக் கட்சிகள் எப்படி எல்லாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆலோசித்தோம். திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். 

சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரோத திமுகவை, அதிமுக - பாஜக கூட்டணி வீழ்த்தி வெற்றி பெறுவோம்,..’’ என்று கூறினார். முன்னதாக இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment