முன்னாள் அமைச்சரும், திமுகவின் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ்நாடு தலைநிமிர, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் எஸ்.கவிதா, தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்” எனத் தெரிவித்திருந்தார். இந்த பதிவு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியின் இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது?. கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில்,பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய, காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது. கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.