கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை (27/07/2025) நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று (26/07/2025) மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு பிரதமர் மோடி வந்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். அதன் பிறகு தொண்டர்கள் ஆரவாரம் செய்ய தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய முனையத்தை துவக்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

மேடையில் பிரதமர் மோடி பேசுகையில், ''தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் புத்தகம் பெற்றுள்ளன. 2,500 கோடி ரூபாய் மதிப்பில் இரு புதிய சாலை கட்டமைப்புகளை திறந்து வைத்துள்ளோம். புதிய சாலைகள் மூலம் தூத்துக்குடி துறைமுகம் மேலும் வளர்ச்சி அடையும். சென்னையையும் டெல்டா பகுதிகளையும் இணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் இருக்கின்றன. தற்சார்பு இந்தியாவில் உயிர்நாடியாக இந்திய ரயில்வே துறை உள்ளது. இங்கிலாந்து உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு புதிய உத்தியோகம் அளிக்கிறது.

தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்கு பாலம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை பார்த்திருப்பீர்கள். இந்தியா தயாரித்த ஆயுதங்களால் எதிரிகளின் பதுங்கு குழிகள் மண்ணோடு மண்ணாகின. இப்போது திறந்து வைக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி புதிய விமான நிலையம் மூலம் 20 லட்சம் பயணிகளை கையாள முடியும். இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி விமான நிலையம் மூலம் நிறுவனங்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும். ஜம்முவை ஸ்ரீநகர் உடன் இணைக்கும் வகையில் அதிநவீன ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது.

Advertisment
a4566
'We have given three lakh crores to Tamil Nadu' - Prime Minister Modi's speech Photograph: (modi)

தேசத்தின் நீண்ட கடல் பாலம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் புதிதாக திறக்கப்பட்ட ரயில் பாதைகள் மூலம் தென்னிந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பயன் பெறுவர். சூரிய மின்சக்தி கூரைகளை அமைப்பதற்காக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தமிழக வளர்ச்சியே எங்கள் பிரதான இலக்கு. ரயில்வே திட்டங்களால் தமிழகத்தின் வளர்ச்சி வேகம் எடுக்கப் போகிறது. கூடங்குளம் அணுமின் திட்டத்தை மேம்படுத்தினால் நாட்டுக்கு தூய்மையான எரிசக்தி கிடைக்கும். 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி கொடுத்துள்ளோம். இந்தத் தொகை கடந்த காங்கிரஸ் கூட்டணி  ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பீடு செய்யும் பொழுது மூன்று மடங்கு அதிகமானது. இந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகள் கொடுத்துள்ளோம். முதன்முறையாக கரையோர பகுதிகளில் மீன்பிடி துறையோடு தொடர்புடைய சமூகங்களுக்கு எந்த ஒரு அரசும் இத்தனை கரிசனத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தியதே இல்லை. நீலப் புரட்சி வாயிலாக நாங்கள் கரையோர பொருளாதாரத்திற்கு விரிவாக்கம் அளித்து வருகிறோம்'' என்றார்.

Advertisment

மேலும் ''இன்று நான் உங்களுடைய கரை புரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன். இந்த உற்சாகத்தின் வெளிப்பாடாக உங்கள் செல்போனை எடுத்து ஒளியை ஒளிர விட்டு காட்டுங்கள்'' என்றார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் செல்போன் விளக்கை ஒளிர விட்டு ஆரவாரம் செய்தனர்.