திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் டிவி கணேஷ் இல்ல திருமண விழாவில்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது “தேமுதிகவின் உள்ளம் தேடி, இல்லம் நாடி மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை இரண்டாவது கட்டம் வருகிற ஐந்தாம் தேதி தொடங்கி 10 நாள் நடைபெற உள்ளது. மக்கள் போற்றக்கூடிய வகையில் இந்த ரத யாத்திரை அமைந்துள்ளது மக்கள் ஆரவாரத்துடன் சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் போது அது நாட்டுக்கும் மக்களுக்கும் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என நம்புகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வேறு எங்களது பயணம் வேறு நாங்கள் காலையில் பூத் கமிட்டி மற்றும் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறோம் மாலையில் ரத யாத்திரை நடத்துகிறோம்.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்கும். கூட்டணி தொடர்பாக யாருடன் கூட்டணி என்பதை வருகிற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிப்போம். இப்போது கட்சி வளர்ச்சியில் அக்கறை காட்டி வருகிறோம். விஜயகாந்த், எம்ஜிஆருக்கு பின்னர் மக்கள்  தலைவராக திகழ்ந்தவர்.அரசியல் கட்சி தலைவர்களாக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் அவரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது ஆகவே அவரை பற்றி பேசுவது சந்தோசம் தான்.

Advertisment

விஜய் கட்சி மாநாட்டில் ரேம்ப் வாக்கில் குதித்து ஏறும்போது பவுன்சர்கள் தொண்டர்களை தள்ளி விட்டது எல்லாக் கட்சியிலும் நடப்பது தான். திட்டமிட்டு யாரும் செய்வதில்லை. காவல்துறைக்கு அடையாளமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இன்றைக்கு கொடி ஃப்ளெக்ஸ் வைக்க அனுமதி மறுத்ததாக எங்கள் மாவட்ட செயலாளர் கூறினார். அனுமதி கொடுத்தால் எல்லாருக்கும் அனுமதி கொடுங்கள் இல்லை என்றால் யாருக்கும் அனுமதி கொடுக்காதீர்கள்.

திரையுலகில் 50  ஆண்டுகளை ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார் அவருக்கு முதல் ஆளாக நானும் தேமுதிகவும் வாழ்த்து தெரிவித்தோம். 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடிப்பது இந்தியாவில் எங்கும் நடக்கவில்லை. கேப்டன் இருந்திருந்தால் அவருக்கு விழா எடுத்திருப்பார். நடிகர் சங்கமோ அதன் நிர்வாகிகளோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது'' இவ்வாறு அவர் கூறினார்.