திருப்பத்தூர் வந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 174.39 கோடி மதிப்பிலான முடிவுற்ற 90 திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு, 68.76 கோடி மதிப்பிலான 60 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடி பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எ.வ.வேலு சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உருவாக்கி இருக்கிறார். அவர் திருவண்ணாமலை மாவட்டமாக இருந்தாலும் அதே நேரத்தில் எங்கும் வல்லவராக எப்பொழுதும் வல்லவராக இருப்பவர் தான் அவர். அதனால் தான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக தலைமை கழகத்தின் சார்பில் நியமித்திருக்கிறோம். தன்னுடைய பொறுப்பில் இருக்கும் துறையை மட்டுமல்ல பொறுப்பு மாவட்டத்தையும் சிறப்பு வளர்த்தெடுத்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
மக்கள் தந்த வரவேற்பைப் பார்க்கின்ற பொழுது கொஞ்சம் இறுமாப்போடு பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்று கேட்டால் 2026 மட்டும் அல்ல 31 ஆக இருந்தாலும், 36 ஆக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப் போகிறோம் என்பதற்கு அடையாளமாக மக்கள் தந்திருக்கக்கூடிய வரவேற்பு காட்டி இருக்கிறது. ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசால் கூட தமிழ்நாட்டில் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
உயர்கல்வி செயற்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. வறுமை இல்லாத நிலை உருவாகும் இடத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நீடித்த வளர்ச்சி குறியீட்டிலும், மருத்துவ குறியீட்டிலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். பணவீக்கம் குறைந்த மாநிலம் நாட்டிலேயே அதிக தொழில் மயமாக்கப்பட்ட, நகர மயமாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வேளாண்துறை மூலமாக பாசன பரப்பும், வேளாண் உற்பத்தியும் அதிகமாக இருக்கிறது. தொழிலாளர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு அடிப்படை காரணம் தலைநகரான சென்னையைச் சுற்றிமட்டும் வளர்ச்சி செய்யப்படாமல் தமிழ்நாட்டினுடைய அத்தனை பகுதிகளுக்கும் தொழில் வளர்ச்சி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
'எல்லாருக்கும் எல்லாம்; எல்லா மாவட்டங்களுக்கும் எல்லாம்' என்ற வகையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம். இதனால் தான் நகரப் பகுதி மாதிரியே கிராமப் பகுதிகளும் வளர்ந்தது. நான் கோட்டையில் இருந்து கொண்டு மட்டும் பணிகளை செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தது ஒரு மாதத்திற்கு மூன்று மாவட்டங்களுக்கு போகிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர், இப்பொழுது திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன்'' என்றார்.