dmk Photograph: (admk)
அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 109வது பிறந்த நாளை இன்று (17-01-26) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலித்திய பின்னர், முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். வாக்குறுதி 1, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும்.
வாக்குறுதி எண்.2, ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். வாக்குறுதி எண்.3, அனைவருக்கும் வீடு, அம்மா இல்லம் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அது போல், நகரப் பகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி அம்மா இல்லம் திட்டம் மூலம் விலையில்லாமல் வழங்கப்படும். அதை போலவே, ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் திருமணமாகி தனி குடித்தனம் செல்கின்ற போது அரசே இடம் வாங்கி அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். வாக்குறுதி எண்.4, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வாக்குறுதி எண்.5, ரூ.25,000 மானியத்துடன் ரூ.5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மூலம் வாகனங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதிமுகவின் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதி பேசு பொருளாகி இருக்கும் நிலையில் 'கடந்த ஐந்து ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையே காப்பியடித்து தேர்தல் வாக்குறுதியாக வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது' என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திகழும் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிவாலயம் வாசலில் குத்த வைத்து காத்திருக்கும் அதிமுகவினர், திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானதும் முதல் காப்பியை வாங்கிக் கொண்டு, அதை அப்படியே காப்பியடித்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவது தான் வழக்கமான நடைமுறை. இந்த முறை, அதில் விசித்திர மாற்றத்தை செய்து தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு "டூப்" போட்டு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்கு அதிமுகவின் நிலைமை பரிதாபமாக போய்விட்டது. 2021ல் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை சரியில்லை எனவே இதையெல்லாம் நிறைவேற்றவே முடியாது என்றார் பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டை அனைத்து தளங்களிலும் முன்னேற்றியதுடன், எதையெல்லாம் திமுகவால் செய்ய முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சொன்னாரோ, அதை எல்லாம் முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டிவிட்டார்.
இப்போது புதிதாக எதுவும் சிந்திக்க திராணி இல்லாமல் திமுக அரசின் பழைய திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அறிவிப்புகளை வெளியிடுகிறது அதிமுக. அவர்கள் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாமல், திமுக அரசின் சாதனை திட்டங்களை ரோல் மாடலாகக் கொண்டு, அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது உங்களுக்கு செட் ஆகல சார். வெயிட் பண்ணுங்க. உங்க மூளையை இப்ப கசக்க வேண்டாம். எப்போதும் போல இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் திமுக தேர்தல் அறிக்கை வந்த பிறகு, அதை முழுமையாக உங்க பழைய ஜெராக்ஸ் மிஷினில் காப்பி எடுக்கலாம்' என தெரிவித்துள்ளார்.
Follow Us