வங்கதேசத்தில், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக ஷேக் ஹசீனாவின் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, முகமது யூனுஸ் என்பவரின் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் இன்று (12.02.2026) நடைபெற்று வருகிறது. புரட்சியின் காரணமாக, ஒரு ஆட்சி வீழ்த்தப்பட்ட நிலையில், முதல் முறையாக மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த தேர்தல் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
இந்த தேர்தலில் சுமார் 12.77 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 45.7 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வெள்ளை நிற வாக்குச் சீட்டுகளும், சட்டத்திருத்தம் தொடர்பான 'ஜூலை சாசனம்' குறித்த வாக்கெடுப்பிற்காக இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 300 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு தொகுதியின் வேட்பாளர் இறந்துவிட்டதால், அந்த தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீதமுள்ள 299 இடங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 9,58,000 பணியாளர்கள் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் 42,779 வாக்குச்சாவடிகளில் 90% க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் சிசிடிவி காட்சிகள் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தற்போது வரை, தேர்தல் சுதந்திரமான முறையில் சிறப்பாக நடைபெற்று வருவதாகத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/bangladesh-election-1-2026-02-12-15-25-46.jpg)