பழங்குடியின நபரை கொலை செய்த கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்த சம்பவம் குஜராத் மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.
குஜராத் மாநிலம் நந்தூர்பார் பகுதியில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஜெயேஷ் வால்வி என்ற நபரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜெயேஷ் வால்வியை கொலை செய்த கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மனுவை சமர்பிக்க 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பேரணி நடத்தினர்.
பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்ததும் திடீரென வன்முறையாக மாறியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை சிலர் சேதப்படுத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பல போலீசாரும் போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் நந்தூர்பார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இருப்பினும் போலீசார் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.