Vijay's election promise The government will bear the education expenses of the children of the landless
சட்டமன்றத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய் மாவட்ட மாவட்டங்களாகச் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று (04-03-26) தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபாட்டி பிரிவு சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், தேர்தல் வாக்குறுதிகளை சிலவற்றை அளித்தார். இது குறித்து பேசிய அவர், “டெல்டா விவசாயிகள் சமீபத்தில் உரம் தட்டுப்பாட்டை சந்தித்தார்கள். சில பேர் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதாக செய்தி வந்தது. நம் டிவேகே ஆட்சிக்கு வந்ததும் உரம் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வோம். 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வேளாண் கூட்டறவு வங்கிகளில் வாங்கிய பயிற்கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் 50% வரை ரத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம். திமுக மாதிரி எல்லோருக்கும் என சொல்லிவிட்டு அதில் தகுதி பிக்ஸ் பண்ணி பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம். எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வோம்.
2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களின் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும். விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும் ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும் அந்த திட்டத்தை உங்களுடைய டிவிகே ஆட்சி நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே நம் ஆட்சி நிற்கும். கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை பார்த்துக்கொண்டு நமது அரசு சும்மா இருக்காது, போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும். அதே போல், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களில் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளர்களுக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளர்களுக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.
ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும். மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு நமது டிவிகேக்கு அரசு கொடுக்கும். கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி, இது மாதிரி அடிப்படை விஷயங்களுக்காகத்தான் நம் அரசு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும். எனக்கு நம்முடைய குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமில்லாமல், தனியார் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும் உத்தரவாதத்தையும் உருவாக்க வேண்டும். அப்படி நாம் உருவாக்கிவிட்டால், அவர்களுக்கான பாதையை இளைஞர்கள் அவர்களே தேர்ந்தெடுத்துப்பார்கள். இத்தனை கோடி, அத்தனை கோடி ஒப்பந்தம் என்று சொல்லி விளம்பரம் மட்டும் செய்யாமல் உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதை செயல்படுத்தினால் போதும், எல்லாம் தன்னால் நடக்கும். அடுத்து நாங்கதான் நாங்கதான், நெஞ்ச நிமிற்றி கூவுறயாராச்சும் நாங்கள் ஊழலே செய்யாதவர்கள் என்றோ, ஊழல் செய்யவே மாட்டோம் என்றோ நெஞ்ச தொட்டு மனசாட்சியோட சொல்ல முடியுமா? ஆனால் நாம் இன்றைக்கு இல்லை, ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் வெளிப்படையாக தில்லாக தைரியமாக சொல்வோம், ஊழல் லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை கொடுக்க உண்மையாக முயற்சி செய்வோம். இதை செய்தாலே எல்லாம் தன்னால் நன்றாக நடக்கும்” என்று கூறினார்.
Follow Us