தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் தமிழக வெற்றி கழகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள வார்ரூமிற்கு நேற்று விஜய் திடீரென விசிட் அடித்து பார்வையிட்டார். தேனாம்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 200 பேர்கள் தேர்தல் பணிகளை வார்ரூமில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் தலைவர் விஜய் வார் ரூமிற்கு சென்ற நிலையில் இரண்டாவது முறையாக சென்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தவெக நிர்வாகிகளுக்கு விஜய் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை ஆய்வு செய்த விஜய் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் இதுவரை பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்காத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்கவும் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.