கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

Advertisment

இதனையடுத்து உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜி. ரவீந்திரன் வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில், த.வெ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், நாளை (05.12.2025) ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' செல்லவும், சோனாம்பாளையத்தில், வாகனத்தில் இருந்தபடி விஜய் பேசவும் முடிவெடுக்கப்பட்டது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து இதற்கு அனுமதி அளிக்கக் கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு அளித்தனர். இருப்பினும் இது குறித்து போலீசார் உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

tvk-vijay-head-vanakkam

இந்நிலையில் புதுச்சேரியில் 9ஆம் தேதி விஜய் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சியினர் காவல்துறையினரிடம் கடிதம் அளித்துள்ளனர். உப்பளம் துறைமுகம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகக் கூறி புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணியிடம் கடிதம் அளித்துள்ளனர். இதற்கான கடிதத்தைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாமல் பொறுப்பாளர் ஒருவர் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment