அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய் செங்கோட்டையனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் கட்சியின் துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

Advertisment

பதிலுக்கு செங்கோட்டையனும் விஜய்க்குச் சால்வை அணிவித்தார். மேலும் கட்சியின் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். அதோடு செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகளும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களுமான ஏராளமானோர் அங்கு வருகை தந்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு, அக்கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையன் குறித்து விஜய் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “20 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரை நம்பி, அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறிய வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற ஒரு பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பிறகு அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களுக்கு உறுதுணையாக அரசியல் களத்தில் இருந்தவர்.

sengottaiyan-vanakkam-our-img
படம் : ஸ்டாலின்

இப்படி 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த செங்கோட்டையனுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரையும், அவருடன் இணைந்த மற்றவர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் நேற்று (26.11.2025) சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவுவைச் சந்தித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment