'Vijay refuses to let me in the house' - Sangeeta's sensational allegation again Photograph: (vijay)
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
ரசிகையாக அறிமுகமான சங்கீதாவை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட விஜய்க்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா, விருது நிகழ்வுகளில் கலந்து கொண்ட சங்கீதா, சில ஆண்டுகளாகவே பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். திருமணமாகி இருபத்து ஐந்து ஆண்டுகளை தாண்டிய நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா, புது கட்சி அறிவிப்பு உள்ளிட்ட எந்த விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் இருப்பதால், சங்கீதா லண்டனில் தனிமையில் வசித்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்து கொண்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். சங்கீதா மீதான ஆபாச இணைய வன்முறை தாக்குதலை விஜய் கண்டிக்க வேண்டும் என அனைத்திந்திய மாதர் சங்கம் வலியுறுத்தி இருந்தது.
அண்மையில் சினிமா தயாரிப்பாளரான கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இந்த திருமண விழாவிற்கு விஜய்யும், திரிஷாவும் ஒரே காரில் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் சொந்த கட்சி தொண்டர்களே விஜய்யை இந்த விவகாரத்தில் எதிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியுள்ளது. அப்படியொரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் சங்கீதா. கூடுதலாக இந்த வழக்கில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், 'விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளார்' என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது, 'விஜய்யை திருமணம் செய்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்துள்ளேன். விஜய்யுடன் நீலாங்கரை வீடு மட்டுமல்லாமல் அவருடன் பல்வேறு இல்லங்களில் வசித்திருக்கிறேன். விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் எனக்கும் சரிபாதி உரிமை உள்ளது. விஜய் வசிக்கும் நீலாங்கரை இல்லத்தில் தான் நானும் வசித்து வந்தேன். ஆனால் இப்போது அந்த இல்லத்திற்குள் செல்வதற்கு விஜய் அனுமதி மறுக்கிறார். பிரிட்டன் குடியுரிமையுடன் நான் லண்டனில் வசிப்பதால் தமிழ்நாட்டில், சென்னையில் தங்குவதற்கு வீடு இல்லை. இதை விஜய் அறிந்திருந்தும் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார். விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டுக்குள் நான் வசிக்க அனுமதிக்குமாறு விஜய்க்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கின் மூலம் விஜய்யிடம் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன். பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல விஜய் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Follow Us