'Vijay needs to come out...' - Attempt to besiege the house Photograph: (tvk)
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என பலர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ்அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 30 உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டிற்கு கூடுதல் ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய்யின் வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள் முற்றுகையிட முயன்றனர். விஜய் வெளியே வரவேண்டும்; இறந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இந்த உயிரிழப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என முழக்கமிட்டபடி வந்த அவர்களை சுற்றிவளைத்த காவல் துறையினர் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.