கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மகாபலிபுரத்தில் இன்று (27-10-25) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். இதற்காக கரூரை சேர்ந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று சென்னை புறப்பட்டனர்.

Advertisment

கரூர் வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்க இயலாத நிலையில் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதையடுத்து கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தவெக நிர்வாகிகள், நேரிலும், போனிலும் சென்னை செல்ல விருப்பமா எனவும் எத்தனை பேர் வருகின்றனர் என்ற விபரங்களை கடந்த 2 நாட்களுக்கு முன் கேட்டறிந்தனர். இதையடுத்து இன்று சென்னை மகாபலிபுரத்தில் விஜய், அவர்களை சந்திக்கிறார்.

Advertisment

இதற்காக கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்காக 5 பேருந்துகள் வரை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் உள்ள 27 குடும்பங்களை சேர்ந்தவர்களில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்னை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் சில குடும்பத்தினர் உயிரிழந்தவர்களுக்கான 30ஆம் நாள் வழிபாடு செய்கின்றனர். இதனால் அவரவர் வசதிக்கேற்ப வருவதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கரூரில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர்  உயிரிழந்தனர். கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்கவே இல்லை என்று தொடர் விமர்சனம் எழுந்த நிலையில், 1 மாதத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களை மகாபலிபுரத்துக்கு அழைத்து சந்திக்க இருக்கிறார். 

Advertisment