Vijay challenges DMK and AIADMK!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை இன்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் பேசியதாவது, “வீட்டில் இருக்கிற என்னுடைய குட்டி நண்பா, நண்பிக்கும் ஒன்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் ஓட்டு போடும் வயதில் இருப்பவர்கள் அனைவரிடமும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க. நாங்கள் அரசியலுக்கு வந்தது எந்த கட்சியையும் ஒழிக்கிறதுக்கோ, அழிக்கறதுக்கோ எல்லாம் கிடையாது. யார் மேல் மீது தனிப்பட்ட வன்மமோ அல்லது தனிப்பட்ட கோபமோ என யார் மேலும் கிடையாது. மற்றவர்கள் மாதிரி வெறுப்பு அரசியல் செய்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் ரீதியா நம்முடைய எதிரிகள் யார் என்று அறிவித்து தேர்தலில் ஜெயித்து மக்களுக்காக எங்களுடைய நன்றி கடனை செலுத்துவதற்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். இதை தெளிவாக சொல்கிறேன்.
அவர்களுடைய இயலாமையை மறைப்பதற்காக ஏ டீம், பி டீம் இதெல்லாம் கூட சேர்த்துக்கொண்டு ஒரே விஷயத்தை சொல்லி அழுவுகிறார்கள். அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும் என்று ஒரே விஷயத்தை சொல்லி அழுவுகிறார்கள். அந்த அழுகைக்கு நாம் ஒரு பதிலடி கொடுக்க வேண்டும். அதிகாரத்தை வைத்து மக்கள் பணத்தை கொள்ளை அடித்தது தாண்டி ஏதாவது கொம்பு முளைத்த பெரிய அனுபவம் இவர்களுக்கு இருக்கிறதா? அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்களுடைய அட்ரஸில் அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இவர்கள் எல்லோருக்கு ஒரு சவால் விடுகிறேன். என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற அந்த தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 வருடமாக மக்கள் இயக்கமாக இருந்து இன்றைக்கு மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து, இந்த கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற 75 வருட கட்சி, 50 வருட கட்சி என்று ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டிருக்கிற எல்லோரையும் மீறி இன்றைக்கு களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தையும் தாண்டி மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோம். நமக்கு அனுபவம் இல்லையாம்?
உங்களுக்கு அனுபவம் என்னவென்று நான் சொல்லட்டுமா? கட்சி ஆரம்பித்த அண்ணாவை மறந்தது, கட்சி ஆரம்பித்த எம்.ஜி ஆரை மறந்தது, கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது தான். இவர்கள் எல்லோரும் சொன்ன விஷயங்கள், பேசின விஷயங்கள், எதை எதை எல்லாம் ஃபாலோ செய்ய வேண்டும் என்று சொன்ன விஷயங்கள் என எல்லாவற்றையும் மறந்தது தான். நமக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள். நமக்கு அனுபவம் இல்லை தான், கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை. அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது. இந்த கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரண்டர் ஆவது, மறைமுகமாக சரண்டர் ஆவது, இந்த மாதிரி அனுபவம் எல்லாம் நமக்கு இல்லை தான். அதுவும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது. மக்களை நேசிக்கிற நல்ல குணம் இருந்தால் போதும்யா. நல்ல சூப்பரான ஒரு நல்லாட்சி கொடுக்கலாம். நல்லாட்சி கொடுப்பதற்கு மெத்த படிச்ச மேதாவிகளாக இருக்க வேண்டும் என ஒன்றும் அவசியம் இல்லை. காமராஜர் மாதிரியோ, எம்.ஜி.ஆர் மாதிரியோ மக்கள் சக்தியின் துணையால் மக்கள் மேல் அக்கறையாக இருக்கக்கூடிய நல்ல அதிகாரிகளின் துணையால் சூப்பரான ஒரு நல்லாட்சி என்னால் கொடுக்க முடியும். செய்து காட்டுகிறேன்.
நான்கே முக்கால் வருடம் மேல் ஆகிறது. இப்போது ஒவ்வொரு வீட்டு கதவை தட்டி உங்கள் கனவுகளை சொல்லுங்கள், நாங்கள் அதை நிறைவேற்றி காட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பாக ஒரு கேள்வி, மக்களுடைய கனவு என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே உங்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அவர்கள் கனவுகளை பற்றி உங்களுக்கு தெரியும்? மக்களுடைய கனவு என்னவென்று நான் சொல்லட்டுமா சார்? 2019,2021,2024 இந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததற்கு காரணம், நீங்கள் மக்களுக்கு எதாவது நல்லது செய்வீர்கள் என்று நம்பிதான். ஆனால் நீங்கள் மக்களுக்கு கொடுத்த பரிசு, மக்களுக்கு பாதுகாப்பே இல்லாத மக்கள் விரோத ஆட்சி. அந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமைக்க வேண்டும் என்பது தான் மக்களுடைய ஒரே கனவு. இந்த மக்கள் விரோத திமுக அரசு நிலைக்கக்கூடாது என்பது மக்களுடைய ஒரே கனவு. 100 சதவீதம் தூய சக்தி தவெக ஆட்சி அமைக்கும். அதில் உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று பேசினார்.
Follow Us