சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி முகாமில்  கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிறகு  செய்தியாளர்களைச் சந்தித்தார்.   

Advertisment

“விஜய் தற்போது இருக்கக்கூடிய  சூழலில் கரூருக்கு போவதற்கு அவருக்கு  அனுமதி கிடைக்கவில்லை. மீறி திரும்பவும் அவர் கரூர் போனால், அங்கு  ஏதாவது ஒரு அசம்பாவிதம், யாராலோ உருவாக்கப்பட்டுவிட்டால், மீண்டும்  ஒரு கெட்ட பெயர் அவருக்கு வந்துவிடும். அதனால்தான்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் பார்க்காமல் இருக்கக்கூடாது  என்பதற்காக, ரூ.20 லட்சத்தை பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும்  அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டார். அவர்களுடன்  வீடியோ காலில் பேசி துக்கமும் விசாரித்துவிட்டார். கண்ணீரும்   கம்பலையுமாக, அந்த மக்களிடத்தில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.  நிச்சயமாக விஜய்க்கு தெரிந்து நடந்த தவறு கிடையாது.  

Advertisment

கரூரில் ஏற்பட்ட சதிகளை எல்லாம் விசாரிக்கத்தான்  சிபிஐ வந்திருக்கிறது. அதுவரை பொறுத்திருக்கக்கூடாது என்பதற்காகத்தான், பாதிக்கப்பட்ட  குடும்பத்தினரை சந்திக்கவேண்டும், அவர்களிடம் மனம்விட்டுப்  பேசவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவர்களை  அழைத்துவருவதற்கான நடவடிக்கை எடுத்து, அவர்களைச் சந்தித்து, உறவாடி, உங்களுடைய குடும்பத்தில்  ஒருவனாக நான் இருக்கிறேன், உங்களைப் பாதுகாப்பேன்  என்று சொல்வதற்காகத்தான் அவரை  வரவழைத்திருக்கிரார் என்பதை நான் அறிகிறேன். அதைத்தான் அவர்  செய்கிறார். அவர் எடுத்திருக்கும் முடிவைப் பொறுத்தமட்டிலும்,  இதைத்தாண்டி விஜய்யால் ஒன்றும் செய்யமுடியாது. 

விஜய் ஒரு ஸ்டார் நடிகர். அவருக்கென்று மாஸ் இருக்கிறது. அதை  மறுப்பதற்கில்லை. அவருடைய நடவடிக்கைகள், குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது.  அதெல்லாம் ஓட்டாக மாறவேண்டும் என்றால், பயிற்சி உள்ள  பயிற்சியாளர்கள் விஜய்க்கு தேவை. அந்த பயிற்சியாளர்களாக   அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள். அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு    நல்லது. வரவில்லை என்றாலும், அதிமுகவுக்கு எந்தக் கெடுதலும்  கிடையாது. அதிமுக ஓட்டு சதவீதம் கொஞ்சம் குறையுமே தவிர,  வெற்றியின் விளிம்பிலிருந்து அதிமுக ஒருபோதும் இறங்கிவராது.  நிச்சயமாக அதிமுக ஆட்சிதான் வரப்போகிறது. விஜய் அதிமுக கூட்டணிக்கு  வந்தால் 220 சீட். விஜய் வரவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு 150  சீட். விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வருவது அவருடைய  எதிர்காலத்துக்கு நல்லது. இது எனது கருத்து. மற்றபடி, அவர் வருவதும்  வராமல் தனியாக நிற்பதும் அவருடைய முடிவு.

Advertisment

மக்களுடைய கருத்து என்னவென்றால், குறிப்பாக கிராமங்களில் எல்லாம்,  அதிமுக கூட்டணியில் எல்லோரும் ஒன்றிணையவேண்டும். என்று  பேசுகிறார்கள். அதிமுக தலைமையில் உள்ள கூட்டணிக்கு விஜய் வருவது  அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு. பின்னாளில் அவருடைய அரசியலுக்கும்  ஒரு பாதுகாப்பாக அமையும். அவர் நல்ல முடிவெடுப்பார் என்று நான்  நினைக்கிறேன். அதற்காக நான் விஜய்யை அழைக்கவில்லை. வந்தால்  வரவேற்போம்.” என்றார்.