Vijay arrives in Delhi - Fan welcomes him with flag Photograph: (TVK)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பல்வேறு கோணங்களில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் விசாரணைக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் டெல்லிக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு உரியப் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு கட்சி சார்பில் ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் மனு அளிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு சிபிஐ அலுவலகத்திற்கு இவ்வளவு பாதுகாப்புகள் வழங்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் என அனைத்து தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகம் மட்டுமன்று அதனைச் சுற்றியுள்ள அரசு கட்டிடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் செல்லும் இடங்களில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அக்கட்சியின் கொடியைக் காட்டி வருகின்றனர். அண்மையில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மலேசிய அரசின் கட்டுப்பாடுகளை மீறி ரசிகர் ஒருவர் தவெக கொடியை காட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி வந்துள்ள விஜய்யை ரசிகர்கள் இருவர் தவெக கொடியைக் காட்டி வரவேற்றனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் கொடியை கீழே இறக்கினர்.
Follow Us